உன்னைப் பார்த்த மழை


உன்னைப் பார்த்த மழை
உற்சாகத்தோடு வந்திங்கு
உன் நலம் சொன்னது

ஒவ்வொரு துளியிலும்
எடுத்து வந்த
உன் முகம் காட்டி
என் ஆயுள் கூட்டியது

குழந்தையாய் நீ
உருமாறிடும் நேரத்தில்
குனிந்துன் குழி விழும்
கன்னம் தீண்டியதையும்
வெட்கத்துடன் சொல்லியது

இன்னும் சொல்லேன் என
எவ்வளவோ கெஞ்சியும்
கொஞ்சமும் நிற்காமல்
மேற்கு தொடர்ச்சி
மலையைத் தாண்டி
மறைந்தது மழை

பொறாமையுடன் அதைப்
பார்த்த படியே நான்